ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில், செம்பாக்கம் : பகுதி :4.

வாரம் ஒரு திருக்கோயில் பற்றி தெரிந்து                                                         கொள்வோம்:

ஆவணி இரண்டாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் :  ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில்செம்பாக்கம். 

                                            பகுதி :4

ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில் முழு வரலாறு 

            வருடம்தோறும் 4 நவராத்திரி விழாக்கள் நடைபெறும் ஆலயம் ஸ்ரீபீடம் ஸ்ரீ பாலா சமஸ்தானம் திருக்கோயில்.

1. மூலிகை லலிதா : ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் :

            செங்கல்பட்டு சாலையில் உள்ளது "வட திருவானைக்கா" என அழைக்கப்படும் 'செம்பாக்கம்'. சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் முழுவதும் மூலிகைகளால் உருவாக்கப்பட்ட தெய்வச்சிலைகள் வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. தற்போது பல வருடங்களுக்குபிறகு காஞ்சி மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் செம்பாக்கத்தில், ஸ்ரீ பீடம் ஸ்ரீ பாலா சமஸ்தான ஆலயத்தில், 9 அடி உயரத்தில் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த அம்பிகையை வணங்கினால் நோயற்ற வாழ்வு தருவாள் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.

ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி அம்மன்

            இந்த திருமேனி பல மூலிகைகள் மரப்பிசின், மரப்பட்டைகள் மற்றும் வேர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட கசாய கலவைக் கொண்டும், (இரசாயனப் பொருட்கள் ஏதும் இல்லாமல்) எண்ணற்ற பாணலிங்கங்கள், சாளகிராமங்கள், வலம்புரி சங்குகள் நவரத்தினங்கள், நமது உடம்பிலுள்ள நாடிநரம்புகளை குறிக்கும் விதமாக வெள்ளிக்கம்பிகள் முதலியன உச்சந்தலை முதல் பாதம் வரை பதிக்கப்பட்டும், வளர்பிறை காலங்களில் மருந்து சாற்றப்பட்டு, பலஆயிரமாயிரம் முறை மூலமந்திர ஜபம் செய்து உருவேற்றி சுமார் ஏழரை ஆண்டுகள் உழைப்பில் லலிதாம்பிகை திருமேனி வடிவமைக்கப்பட்டுள்ளது.

            தாந்திரீக முறையில் இந்த அம்பிகை மந்திர, யந்திர, தந்திர, அஸ்திர, ஸஸ்த்திரம என்ற முறையில் அமையப்பெற்றவளாவாள். திதி நித்யா தேவதைகளை படிகளாக கொண்டு ஆலயத்தின் மேல்தள மாடியில் (கட்டுமலை கோவில்) கருவறையில் பிரதிஷ்டையாகியுள்ளது. நின்ற கோலத்தில் அங்குச, பாசம் இரண்டும் பிரயோகத்தில் இருக்க, கீழ்க்கையில் மலர் (புஷ்பபாணம்) மற்றும் கரும்பும் ஏந்தி அம்பிகை மகா சௌத்தரய ரூபத்துடன் அருள்பாலிக்கின்றாள். 

            மூலிகை அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. மூலிகை மற்றும் அஷ்டகந்ததால் உருவாக்கபட்ட லேபனம் (தைலம்) குறிப்பிட்ட சில காலங்களில் பூசப்படும், மாதம் ஒருமுறை மட்டும் பிரத்யேகமாக தறியில் நெய்யப்பட்ட 51 அடி புடவை அணிவிக்கப்படும். தினசரி பாதபூஜை உண்டு.

            தாய் மருந்து உண்பது போல கலிதோஷத்தை நீக்கி செளபாக்யம், ஆனந்தம், ஆரோக்யம் தந்திட நம் நலன் பொருட்டு மகாசக்தி சித்த மருத்துவச்சியா அனுக்கிரகம் புரிகின்றாள். நோயற்ற வாழ்வு பெறுவதே இந்த அம்பிகையின் தரிசன பலனாகக் கூறப்படுகிறது. சிதம்பரத்தை நடராஜ சபை என்றும் ஸ்ரீ ரங்கத்தை அரங்கம் என்றும் அழைப்பதுபோல், இங்கு அம்பிகை கோயில் கொண்டிருக்கும் ஆலயம் "ஸ்ரீசக்ரசபை" என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் இங்கு அம்பிகை வாராகி, மாதங்கி பரிவாரங்களுடன் தர்பாரில் கோலோச்சி பரபாலனம் செய்வதாக ஐதீகம்.  ஹரி, ஹரன், அம்பிகையை வழிபட்ட பலனைத்தரும் மூம்மூர்த்தி சொரூபிணி.

வழிபடும் முறை:

            திதி நித்யா படிவழியே ஏறிச்சென்று அம்பிகையை தரிசித்துவிட்டு அதே படி வழியே இறங்காமல், எதிர்திசைபடி திதி நித்யா படிவழியே இறங்கவேண்டும். 

            பெளர்ணமி திதியில் மட்டுமே சர்வ அலங்கார விசேஷ 27 வகை மகா தீபாராதனையை தரிசிக்க முடியும், மூலிகை பிரசாதம் வழங்கப்படும். 


2. ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி :

                        ஆதிசக்தியின் அம்சம் தான் ஸ்ரீ பாலா தெய்வம்

             இந்த "பாலா" அம்சம் ஒரு சின்னஞ்சிறிய பெண்ணின் அம்சம் என்பது ஆச்சரியமான ஒன்று. நம்மில் பலரும் அறிந்திராத ஒன்று. தமிழில்; "வாலை", "வாலாம்பிகை" என்று சித்தாந்தம் இவளை வணங்குகிறது. சமஸ்கிருத்தில் "பாலா" என்று வேதாந்தம் இந்த குழந்தை தெய்வத்தை வணங்குகிறது.


            கீழ்த்தளத்தில் குரு மண்டல அசாத்ய ஸ்ரீசக்ர பிரதிஷ்டையுடன் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை தரிசிக்கலாம். ஸ்ரீபாலா - அவள் நல்லவர்க்கு நடுவே விளையாடுவாள் வல்லவர்கெல்லாம் வல்லலளாய் ஆட்சி செய்வாள், அவளை விட அரியதான சூட்சமம் ஏது? என்கிறார் சித்தர் கருவூரார். 
சித்தமெல்லாம் சிவ மயமாய் திளைத்திருந்த ஆதி சக்தியின் அருளும் பூரணமாக தேவை என்பதை சித்தர்கள் உணர்ந்திருந்தனர். அத்தகையை அவளையே போற்றி அகத்தியர், போகர், திருமூலர், கொங்கணர், கருவூரார்  போன்ற சித்தர்கள் வணங்கி பூஜித்தனர். 

            பல சித்தர்கள் பூஜித்த பாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவமாக பட்டு பாவாடை சட்டையுடன் ரத்தினகரங்களுடன் நட்சத்திரங்களை பழிக்கும் முக்தியுடன் பக்தர்களை ‘வா’ என்று தாயுள்ளத்துடன் அழைத்து அருள்பாலிக்கிறார்.

வழிபடும் முறை :  

            குழந்தைகளுக்கு பிரசாதமாக தேனைக் கொடுக்கின்றனர். இதனால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

            குழந்தைகளின் பிறந்தநாளில் அபிஷேக  அர்ச்சனைகள் அன்னதானம் செய்தும்,  பிறந்த வயது எண்ணிக்கையை தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் "திதி தோஷ நிவர்த்தி" கிடைக்கும் தலம்.

            கல்யாணம் கைகூட  தங்கள் பிறந்த நட்சத்திரநாள் அல்லது பிறந்த திதி நாளில்  ஸ்ரீபாலாவிற்கு ஜோடி பொம்மை வைத்து சிவப்பு மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்வது இத்தலத்தின் சிறப்பு.


நேர்த்தி கடன் நிறைவேற்றும் முறை :  

             பிரார்த்தனைகள் நிறைவேறியதும் அம்பாளுக்கும், மேலும் பள்ளியில் படிக்கும் 3 ஏழை குழந்தைகளுக்கும் பட்டுப் பாவாடை சட்டை மற்றும் அவரவர் வசதிற்கேற்ப கொலுசு கொடுத்தும் தங்களின் நேர்த்திகடன் நிறைவேற்றுக் கொள்கின்றனர்.


அமைவிடம் :



ஸ்ரீமத் ஒளஷத லலிதா மகா திரிபுரசுந்தரி ஸ்ரீசக்ரராஜசபை - ஸ்ரீபீடம் ஸ்ரீபாலா சமஸ்தான ஆலயம்,

திருப்போரூர் (OMR)- செங்கல்பட்டு சாலை,

செம்பாக்கம், திருப்போரூர் தாலுகா,

காஞ்சிபுரம் மாவட்டம்-603 108.

(திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் அமைந்துள்ளது செம்பாக்கம்.)

Comments

Popular posts from this blog

ஆவணி மூன்றாவது வாரம் தெரிந்து கொள்ளும் கோயில் : அருள்மிகு ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் சுவாமி திருக்கோவில், கெருகம்பாக்கம். : பகுதி1

ஸ்ரீ வியாச சாந்தாலீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம் : சித்தர்க்கடியான்.